இன்றைய குறள்

Tuesday, December 11, 2012

காத்திருக்கிறேன் இங்கே......கைப்பற்ற நீ எங்கே?



ஆனந்தமாக திரிந்தோம்.
ஆம்,
கடற்கரை சுடுமணல்,
பாதத்தை துளைப்பதை பற்றி
கவலை இல்லாமல் ஓடி விளையாடினோம்...!

ஒதுங்கும் சிப்பிகளை ஒவ்வொன்றாக,
சேர்ந்து
பொறுக்கி,
பத்திரமாக
சேமித்து கொண்டோம்...!
நான் சிப்பிகளை மட்டும் இல்லை,
உன் அன்பையும்
என் மனதினுள்
சேமித்துக்கொண்டேன்...!

அலையை அலை
துரத்துவது போல்
கரையில்
அவர் விரட்ட
நான் முன் செல்ல
கடற்கரை முழுவதும்
எங்கள் பாதச்சுவடுகள்...!

காதலில் உல்லாசமாய் நாங்கள்
திரிய,
திரிந்தது போதும் என்று
அழகாக முடிந்த
திருமணம்.

காதல் வலுபெற்றது...!
கூடவே பொறுப்புகளும்...!

கடலில் நீ பிடித்து
வந்த மீன்களை
அடுக்கி,
மீன் கூடையை கையில்
சுமக்கும் பொழுது
பூவாடை வீசுகிறது....!
ஒரு வேளை நீ என் தலையில்
தூக்கி வைத்ததினாலோ
என்ற ஐயம் என்னுள்
அன்று என்னுள்.

காதலில் திளைத்த நான்,
இன்று,
கரையில் தனியாக,
நீ வரும் திசையறியாது,
கடல் அன்னையை நோக்கி....!

தினமும் கடலினுள்
சென்று திரும்பினால்,
அது மறுபிறப்பே!
நீயும் கடலினுள் சென்று
திரும்புவதால்
உன்னை அவள் ஈன்று
எனக்கு அளிக்கிறாள்....!

நித்தமும் நடப்பது நான்.
ஆனால்,
இன்று என் மனம்
பதைக்கிறது...!
எப்பொழுதும் தமிழ் ரத்தத்தை
காவு கேட்கும்
சிங்கள காடையர்களை
கண்டேனே கனவில்,
அதை எண்ணி...!

என்றும் சுகமாக
வீசும் கடற்கரை காற்று
இன்று
சூறாவளியாக வீசுகிறது
என் நெஞ்சில்...!
நறுமண பூக்களில்
கருவாடு வாசம்...!
குளிரான நிலவொளி,
சுட்டு வீழ்த்துகிறது...!

என்னுள் கலந்துவிட்ட
நீ
இல்லாத கனம்,
கடலினுள் பாய்ந்து
உன்னை தேடி வரலாமா
என்று துடிக்கிறது
என் இதயம்.

திசையரியாமல் தவிக்கிறேன்....!
விரைந்து வா என்
அன்பே,
காத்திருக்கிறேன் நான் இங்கே...!
கைப்பற்ற நீ எங்கே...?!

4 comments:

  1. துயரை உணர முடிகிறது
    மனம் கீறிப் போகும் பதிவு
    துயர் விலகவும் பதிவு தொடரவும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

பழமொழி