இன்றைய குறள்

Wednesday, June 20, 2012

சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டுகள் தண்டனை

போர்க்குற்றம் என்றதும் தமிழர்களின் நினைவுக்கு முதலில் வருவது மகிந்த ராஜபக்சேதான். அவர் எப்போது தண்டிக்கப்படுவார் என்றுதான் தமிழர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்கள். தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகை​யில் ஒரு தீர்ப்பு வந்துள்ளது. ஆம், உலகப் படுகொலைகள் வரலாற்றில் முதல்முறை​யாக, ஒரு நாட்டின் முன்னாள் அதிபர் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தண்டனையும் பெற்றுள்ளார். அவரது பெயர் சார்லஸ் டெய்லர்!

வைரக்கல்லின் தேசம் என்றுதான் ஆப்​பிரிக்க நாடான சியாரா லியோனைச் சொல்​வார்கள். ஆனால், இந்த நாடு 1991 முதல் 2002-ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலகட்டங்களில், ரத்தம் தெறிக்கும் கதறல் பூமியாக இருந்தது. இந்த உள்நாட்டுப் போரில் ஒரு பாவமும் அறியாத பொதுமக்களைக் கொடூரமாகக் கொலை செய்த ஆயுதக்குழுவுக்கு ஆதர​வாக இருந்தவர் சார்லஸ் டெய்லர் எனப்படும் சார்லஸ் மெக்ஆர்தூர் கங்காய் டெய்லர். இவர், அண்டை நாடான லைபீரியாவைச் சேர்ந்​தவர். இவரது ஆதரவு பெற்ற ஆயுதக் குழு கொலை, கற்பழிப்பு எனப் பல கொடூரங்​களுக்கு மக்களை உள்ளாக்கியது. 50 ஆயிரம் உயிர்க் கொலைகள், பல்லாயிரக்​கணக்கான பெண்கள் வன்புணர்ச்சி, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவைப் பிடுங்கி எறிந்த கொடூரம் போன்றவை லியோனில் அரங்கேறின. சின்னஞ்சிறு குழந்தைகளின் கைகளை மணிக்கட்டு வரையில் கதறக் கதற வெட்டிப் போட்டது, வெறி பிடித்த புரட்சிக் குழு. ''நாளைக்கே உங்களுக்கு ஓட்டு உரிமை வந்தாலும் எங்கள் எதிரிக்கு நீங்கள் ஓட்டுப் போடக் கூடாது. அதற்குத்தான் இந்தத் தண்டனை!'' என்று அந்தக் குழந்தைகளை நோக்கி கொக்கரிப்பு வேறு (இப்படி கைகள் வெட்டப்பட்டஒரு பெண்ணின் நிஜக்கதை 'என் பெயர் மரியாட்டூ' என்ற தலைப்பில் விகடன் பிரசுரமாக வெளியாகி உள்ளது!)இந்த ஆயுதக்குழுவின் ஆதரவோடு, லைபீரிய எல்லைப் பகுதியில் போர் நடத்தி, ராணுவக் கட்டமைப்போடும் பலத்தோடும் லைபீரிய அதிபரானார் சார்லஸ். இதன் பின் சார்லஸ் டெய்லருக்கு எதிராக வேறு ஓர் ஆயுதக் குழு உருவெடுத்தது. அதனால், 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ல் டெய்லரின் அதிபர் பதவி பறிபோனது. இதன்பின், நைஜீரியாவில் நாடு கடந்து வாழ்ந்து வந்தார் சார்லஸ் டெய்லர். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, நைஜீரிய எல்லையில் கோடிக்கணக்கான பணத்துடன் 2006-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட்டது. ஐ.நா. மன்ற உதவியுடன் சியாரா லியோனில் உள்ள சிறப்பு விசாரணை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே, டெய்லரைக் கொல்வதற்கு பல முயற்சிகள் நடக்கவே, அவர் மீதான வழக்கு விசாரணை நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகருக்கு மாற்றப்பட்டது. அதுதான், சர்வதேச நீதிமன்​றங்களின் தலைமை இடம் என்பது குறிப்பிடத்தக்கது.



2007-ம் ஆண்டு ஜூன் மாதம் டெய்லர் மீதான விசாரணை தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, தன் மீது சுமத்தப்பட்ட படுகொலைகள், அடிமைப்படுத்துதல், பாலியல் போன்ற எவ்விதப் புகார்களையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், 'சார்லஸ் டெய்லர் போர்க் குற்றவாளிதான்’ என்பதற்கான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. அதை அடுத்து, 2012-ம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று 'சார்லஸ் டெய்லர் ஓர் போர்க் குற்றவாளியே’ என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பு கடந்த 30-ம் தேதி வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ரிச்சர்ட் லூஸிக், 'சார்லஸ் டெய்லரின் போர்க் குற்றங்கள் மனித இன வரலாற்றில் மிக மிகக் கொடூரமானது. சியார லியோனில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது பல கொடூரங்களைச் செய்த ஆயுதக் குழுவினருக்கு அனைத்து வகை​யிலும் உதவிகளைச் செய்துள்ளார். ஒரு நாட்டை ஆளக்கூடியவர், குற்றங்களைத் தடுக்கக்கூடியவராக இருக்க வேண்டும். பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். மாறாக, குற்றங்களைச் செய்யக்கூடியவராக இருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நீதி தாமதிக்கலாம்... ஆனால், தோற்காது என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளது, சார்லஸ் டெய்லருக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தண்டனை. இவருக்கே 50 ஆண்டுகள் தண்டனை என்றால், சியாரா லியோன் அரக்கத்தனத்தை தூக்கிச் சாப்பிட்ட ஈழத்துக் கொடுமைகளுக்கு... எரியும் குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்த பாவத்துக்கு என்ன தண்டனை ராஜபக்சேவுக்கு?!


http://www.silentimages.org/2012/04/chris-davidson-eliza-camp-in-sierra-leone/

http://www.truthasaur.com/world/sierra_leone_africa.html

No comments:

Post a Comment

பழமொழி